ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் பெயரை பயன்படுத்தி பெண் ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்றதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, உண்மை குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அவர் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கடன் சுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை ஏமாற்றி, மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதில் சிலருக்கு அரசியல் பின்னணி இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியிருப்பதை நாளிதழ்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக அறிந்ததாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில், சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்ட அனைவரையும் அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும், வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் சட்டவிரோத லாட்டரி விற்பனை மற்றும் அதன் பின்னணியில் உள்ள நபர்கள் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதோடு, வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதேபோன்று வேறு பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெண்களின் பாதுகாப்பு மற்றும் சமூக நீதி உறுதி செய்யப்படும் வகையில் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்காத பட்சத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தொடர் ஜனநாயக போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தெரிவித்துள்ளார்.