“பத்திரிகையாளர் என்பதற்கு என்ன தகுதி?” என்ற கேள்வி தற்போது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீப காலமாக, எந்த கல்வித் தகுதியும் இல்லாத பலரும் தங்களை பத்திரிகையாளர்கள் என கூறிக் கொண்டு செயல்பட்டு வருவது குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
ஒரு செய்தித்தாள் அல்லது ஊடக நிறுவனத்தை தொடங்குவதற்கும் நடத்துவதற்கும் தமிழக அரசு பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ள நிலையில், பத்திரிகையாளர்கள் நியமனத்தில் மட்டும் தெளிவான தகுதி நிர்ணயம் இல்லை என்பதே அவர்கள் முன்வைக்கும் முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது.
அதிகரிக்கும் “பத்திரிகையாளர்கள்”
“யாரை எடுத்தாலும் பத்திரிகையாளர் என்று சொல்லும் நிலை உருவாகி விட்டது. இதனால் பத்திரிக்கை துறையின் மரியாதையும், நம்பகத்தன்மையும் பாதிக்கப்படுகிறது” என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
பத்திரிக்கை துறையில் பணியாற்றுவோர் குறைந்தபட்சம் ஜர்னலிசம், மாஸ் கம்யூனிகேஷன் அல்லது ஏதேனும் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
மாவட்ட நிர்வாகத்தின் பங்கு என்ன?
மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு துறைகள், எந்த அடிப்படையில் பத்திரிகையாளர்களை அங்கீகரித்து அடையாள அட்டைகள் வழங்குகின்றன? அவர்களின் கல்வித் தகுதி, அனுபவம் அல்லது ஊடகப் பணிச்சான்றுகள் சரிபார்க்கப்படுகிறதா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
பொறுப்புள்ள துறையில் பொறுப்பற்ற நியமனமா?
“பத்திரிகை என்பது சமூகத்தின் கண், காது, குரல். அதில் தகுதி இல்லாதவர்கள் நுழைவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது” என சமூக செயல்பாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தகுதி இன்றி பத்திரிகையாளர் என்ற பெயரில் செயல்படுவோர் காரணமாக, உண்மையான பத்திரிகையாளர்களின் பணியும் மதிப்பும் பாதிக்கப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
அரசுக்கு கோரிக்கை
பத்திரிகை துறையின் நம்பகத்தன்மையை காக்க,
பத்திரிகையாளர்கள் நியமனத்திற்கு கல்வி மற்றும் தொழில்துறை தகுதி நிர்ணயிக்க வேண்டும்
அடையாள அட்டைகள் வழங்குவதற்கு ஒழுங்குமுறை வழிகாட்டுதல்கள் உருவாக்க வேண்டும்.
போலி பத்திரிகையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.