பல்வேறு பொதுநல கோரிக்கைகளுக்காக திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், மதிமுக முதன்மை செயலாளருமான துரை வைகோ அவர்கள் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார்.
முன்னாள் ராணுவ வீரர்கள் கோவில்பட்டியில் “முன்னாள் ராணுவ வீரர் நினைவு ஆலயம்” அமைக்க வேண்டும் என்று துரை வைகோவிடம் மனு அளித்தனர். அதனை தொடர்ந்து துரை வைகோ தலைமையில் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் அவர்களிடம் மனு வழங்கப்பட்டது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
மேலும், கயத்தாறில் அமைந்துள்ள பாஞ்சை வேந்தன் வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்திட வீரபாண்டிய கட்டபொம்மன் அறக்கட்டளை சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதையும் துரை வைகோ மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க கோரினார்.
பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய துரை வைகோ, “தலைவர் வைகோவின் நடைபயணத்தின் நோக்கம் சாதி மத எல்லைகளை தாண்டி இளைஞர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதற்காக. தமிழக மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும்,” என்று தெரிவித்தார்.
அதோடு வாக்காளர் சிறப்பு சீராய்வு (SIR) குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு பதிலளித்த அவர், “இதற்கான அவசரம் என்ன? ராகுல் காந்தி கூறியபடி இதிலும் அரசியல் நோக்கம் தெரிகிறது,” என்றார்.
நாளை மறுநாள் நவம்பர் 11 அன்று திமுக முன்னெடுக்கும் எஸ்ஐஆர் ஆர்ப்பாட்டத்திற்கு மதிமுக முழுமையான ஆதரவு அளித்து கலந்து கொள்ளும் என்றும் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் தூத்துக்குடி நகருக்குள் கோரம் பள்ளம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் சுவரில் மோதி படுகாயம் அடைந்தனர். அதை கண்ட துரை வைகோ உடனடியாக வாகனத்தை நிறுத்தி ஆம்புலன்ஸ் அழைத்து முதல் உதவி செய்தார். இதனால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு நிலவியது.
முன்னதாக துரை வைகோ அவர்கள் சென்னையிலிருந்து தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்திற்கு விமானம் மூலம் வந்தார். அங்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.எஸ். ரமேஷ், திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ. நிஜாம், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயக ரமேஷ் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நிகழ்வில் மதிமுக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகள், மாநகர நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.