ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் சிப்காட் தனி மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரலிங்கம் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கடந்த 2-ஆம் தேதி தொடங்கிய ஜமாபந்தி நிகழ்ச்சி இன்று நிறைவடைந்தது. இதில் பசுவந்தனை, பரிவல்லிக்கோட்டை, ஓட்டப்பிடாரம், எப்போதும் வென்றான், வேடநத்தம், மணியாச்சி உள்ளிட்ட குறுவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கை மனுக்களை சமர்ப்பித்தனர்.
ஜமாபந்தி நாட்களில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 715 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 152 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. நிறைவு நாளான இன்று ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர், சில்லாநத்தம் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு 135 மனுக்களை வழங்கினர்.
மேலும், உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 8 பேருக்கு ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான இறப்பு நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டது. ஒருவருக்கு தற்காலிக நிவாரண உதவி, 2 பேருக்கு வாரிசுச் சான்றிதழ் மற்றும் 11 பேருக்கு பட்டா பெயர் மாற்றம் மற்றும் இ-பட்டாக்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் சிப்காட் தனி வட்டாட்சியர் சந்திரன், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அய்யனார், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் இசக்கிராஜ், துணை வட்டாட்சியர்கள் மரியவியாகுல ஜெயா, மாரிமுத்து, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய்த் துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.