தூத்துக்குடியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வ.உ.சி. கல்லூரியின் பவள விழாவை முன்னிட்டு, கல்லூரியின் 75 ஆண்டுகால கல்விச் சேவை மற்றும் சமூகப் பங்களிப்புகளைப் பதிவு செய்துள்ள MEMORABILIA என்ற நினைவு நூலும், கல்லூரியின் வரலாற்று தகவல்கள் மற்றும் அரிய புகைப்படங்களை கணினித் தரவுகளாக ஒருங்கிணைத்துள்ள VOCC DIGITAL DIARYயும் இன்று சென்னையில் வெளியிடப்பட்டன.
இந்நூல்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணத் தொகுப்பை முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். 1951ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகவும், எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களும் தரமான உயர்கல்வி பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடனும் தொடங்கப்பட்ட வ.உ.சி. கல்லூரி, கடந்த 75 ஆண்டுகளாக கல்வி, சமூக முன்னேற்றம் மற்றும் மாணவர் வளர்ச்சிக்காக ஆற்றிய பங்களிப்புகளை MEMORABILIA நூல் விரிவாகப் பதிவு செய்கிறது. மேலும், கல்லூரியின் வரலாற்று நினைவுகளை இன்றைய தலைமுறைக்கு ஏற்ற வகையில் டிஜிட்டல் வடிவில் தொகுத்து வழங்கும் முயற்சியாக VOCC DIGITAL DIARY உருவாக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி கருணாநிதி, முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன், வ.உ.சி. கல்லூரி செயலாளர் ஏ.பி.சி.வி. சொக்கலிங்கம், வ.உ.சி. கல்வியியல் கல்லூரி செயலாளர் ஏ.பி.சி.வி. சண்முகம், கல்லூரி முதல்வர் சொ. வீரபாகு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், ஏ.பி.சி. மகாலட்சுமி கல்லூரி செயலாளர் சுப்புலட்சுமி, பேராசிரியர்கள் முனைவர் ராதிகா, முனைவர் மீனாட்சிசுந்தரம், முனைவர் பட்சிராஜன், முனைவர் ஜாக்சன் மற்றும் கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர் ரோகித் ஆகியோரும் உடனிருந்தனர்.