கரூரில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பேச்சு நடந்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்த துயர சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில், இன்று காலை கரூர் அரசு மருத்துவமனைக்கு வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்), உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் இறந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அதேபோல் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்து உற்சாக வார்த்தைகள் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
“கரூரில் நேற்று தவெக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனையில் 51 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் 30 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தவெக இதற்கு முன் பல மாவட்டங்களில் கூட்டங்கள் நடத்தியுள்ளது. அங்கும் பெருமளவு மக்கள் கூடினர். அதுபோல் கரூரிலும் கூடினர். ஆனால் பாதுகாப்பு குறைபாடுகள் தெளிவாகவே தெரிந்தது. காவல்துறை போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை. அதே நேரத்தில் திமுக கூட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பாக நியமிக்கப்படுகிறார்கள். இந்த அரசு ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறது.
அரசு, காவல்துறை நடுநிலையாக செயல்பட வேண்டும். அதிமுக ஆட்சியில் பல்லாயிரக்கணக்கான போராட்டங்கள் நடந்தபோதும், முழுமையான பாதுகாப்பு வழங்கியிருந்தோம். இதுபோன்ற துயர சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை.
ஒரு அரசியல் தலைவர் தனது கூட்டங்களில் ஏற்பாடுகளை மதிப்பாய்வு செய்ய வேண்டும். கூட்டம் எந்த நேரத்தில் என்று அறிவித்தால், அதே நேரத்தில் நடைபெற வேண்டும். பல மணி நேரம் தாமதமாக தொடங்கும் போது பிரச்சினைகள் உருவாகின்றன.
முதலமைச்சர் வந்து சந்திப்பது அவரது கடமை. எந்த அரசாங்கமாக இருந்தாலும் வேகமாக செயல்பட வேண்டும். இந்த நேரத்தில் நான் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. விலைமதிக்க முடியாத உயிர்களை நம் சகோதர சகோதரிகள் இழந்துள்ளனர். இது இந்தியா முழுவதும் முதல் முறையாக ஒரு அரசியல் கட்சியின் பொதுக்கூட்டத்தில் இத்தனை உயிரிழப்பு. மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
எல்லா அரசியல் கட்சி தலைவர்களும் இதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அனுபவமிக்க கட்சிகள் போல, கூட்டம் நடத்தும் போது பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னோடியாக செய்து, இதுபோன்ற துயர சம்பவங்களை தவிர்க்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.