இந்தியா சுதந்திரம் அடைந்த பின் ஜனநாயகத்தின் நான்கு தூண்களாக சட்டமன்றம், நிர்வாகம், நீதித்துறை மற்றும் ஊடகங்கள் விளங்கி வருகின்றன. அவற்றில் ஒரு முக்கிய தூணாக கருதப்படும் பத்திரிகை துறை, பேச்சுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை ஆகியவற்றை பயன்படுத்தி மக்களின் குரலை ஆட்சியாளர்களிடம் எடுத்துச் செல்லும் பணியை இடைவிடாது செய்து வருகிறது.

கடும் வெயில், கனமழை, பெருவெள்ளம், இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் பணியாற்றும் பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்களின் திட்டங்கள், அரசின் சாதனைகள், பொதுமக்களின் பிரச்சினைகள் என அனைத்தையும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் கடமை உணர்வோடு செயல்பட்டு வருகின்றனர். ஆனால், இத்தகைய கடமை உணர்வோடு பணியாற்றும் பத்திரிகையாளர்களின் அடிப்படை வாழ்வாதார கோரிக்கைகள் பல ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் இருப்பது வருத்தமளிக்கிறது.

தூத்துக்குடி மாவட்ட பத்திரிகையாளர்களின் வீட்டு மனை வழங்கும் கோரிக்கை கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த காலகட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சர்கள் ஆகியோரிடம் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.

2019 ஆம் ஆண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒரு ஊராட்சி பகுதியில் குறிப்பிட்ட அளவு நிலம் ஒதுக்கப்பட்ட போதும், அதற்கு வழித்தட வசதி இல்லாத காரணத்தால் மாற்று ஏற்பாடு தேவைப்பட்டது. இதனையடுத்து தனிநபரின் நிலத்தை அரசாங்கத்திற்கு ஒப்படைக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அப்போது கலெக்டராக இருந்த சந்தீப் நந்தூரியின் அறிவுறுத்தலின் பேரில், 2020 பிப்ரவரி 12 ஆம் தேதி அந்த நிலம் ஆளுநர் பெயரில் பதிவு செய்யப்பட்டு, அசல் ஆவணங்கள் பிப்ரவரி 13 அன்று மாவட்ட கலெக்டரிடம் நேரில் வழங்கப்பட்டது. ஆனால், அதற்கு பின்பும் ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில் வீட்டு மனை வழங்கும் பணிகள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இதற்கிடையில் 2019 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி வந்தபோதும் பத்திரிகையாளர்கள் சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. அதுபோலவே, தற்போதைய திமுக ஆட்சியில் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையும் உருவானது. இருப்பினும், காலம் கடந்தும் வாக்குறுதி நிறைவேறாத நிலையே தொடர்கிறது.

இந்த நிலையில், 20.12.2025 (சனிக்கிழமை) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்திற்கு வருகை தந்து, திருநெல்வேலி மாவட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இந்த வருகையின் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்களின் நீண்டநாள் கோரிக்கையை கருத்தில் கொண்டு, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் மூலம் உடனடியாக வீட்டு மனை வழங்க உத்தரவிட வேண்டும் என்று ஒட்டுமொத்த பத்திரிகையாளர்கள் சார்பில் வலியுறுத்தப்படுகிறது.

திராவிட மாடல் ஆட்சியில், கடமை உணர்வுடன் பணியாற்றும் ஊடகவியலாளர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைக்கும் வகையில், இந்த 25 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் முதல்வர் ஸ்டாலினை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.