தூத்துக்குடி வண்ணார் முதல் தெருவைச் சேர்ந்த சரவணகுமார் (வயது 41) என்பவர், கடந்த 16ஆம் தேதி இரவு 8.55 மணியளவில் தன்னுடைய இருசக்கர வாகனத்தை தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மாநகராட்சி நிர்வாகத்தின் வாகன காப்பகத்தில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.

மறுநாள் 17ஆம் தேதி காலை தனது வாகனத்தை எடுத்து செல்ல காப்பகத்திற்கு வந்த சரவணகுமார், அங்கு தனது இருசக்கர வாகனம் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அங்கு பணியில் இருந்த மாநகராட்சி பணியாளர்களிடம் கேட்டபோது, உரிய விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து காப்பகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அடையாளம் தெரியாத ஒருவர் இருசக்கர வாகனத்தை காப்பகத்திலிருந்து எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக சரவணகுமார் மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இதே மாநகராட்சி வாகன காப்பகத்தில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருட்டு போவதாகவும், போதிய பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் செக்யூரிட்டி ஏற்பாடுகள் இல்லாததே இதற்கு காரணம் எனவும் வாகன உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு, வாகன காப்பகங்களில் வாகனங்கள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.