தூத்துக்குடி மாவட்டம் அய்யனடைப்பு கிராமத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் மரம் நடும் பசுமை விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமை வகித்தார். திட்ட இயக்குநர் ஐஸ்வர்யா, வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், கோட்டாட்சியர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அய்யனடைப்பு கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மொத்தம் 56 மரக்கன்றுகள் நடப்பட்டன. பசுமை வளர்ச்சியின் அவசியம் குறித்து விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

விழாவில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, கிராம உதயம் கிளை அலுவலகம் ஆழ்வார்தோப்பு தொண்டு நிறுவன மேலாளர் வேல்முருகன், வனச்சரகர் பாபு, வன அலுவலர் ஜெயக்குமார், அய்யனடைப்பு கிராம உதவியாளர் சீனிவாசன், பசுமை தோழர் சந்தன சங்கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

இந்த பசுமை விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட வனத்துறை, கோத்தாரி இன்டஸ்ட்ரியல், எக்னோரா நிறுவனம் மற்றும் கிராம உதயம் தொண்டு நிறுவனங்கள் இணைந்து செய்திருந்தன.