இன்சூரன்ஸ் துறையில் அன்னிய மூலதன உச்சவரம்பை 100 சதவீதமாக உயர்த்தும் மசோதாவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி, வங்கி மற்றும் இன்சூரன்ஸ் ஊழியர் சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது.

தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள எல்.ஐ.சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வங்கி ஊழியர் சங்கமான ஏஐபிஇஏ, பிஇஎப்ஐ, ஜிஐசி உள்ளிட்ட அமைப்புகள், இன்சூரன்ஸ் முகவர்கள், முதல்நிலை அதிகாரிகள், ஊழியர்கள், வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் பென்சன்தாரர்கள் கலந்து கொண்டு மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத் தலைவர் கருப்பையா தலைமை வகித்தார். கோட்டச்சங்க இணைச் செயலாளர் சீனிவாசன் துவக்க உரையாற்றினார். பிஇஎப்ஐ சார்பில் தங்கமாரியப்பன், ஏஐபிஇஏ சார்பில் கிருஷ்ணமூர்த்தி, எல்.ஐ.சி பென்சனர் சங்கம் சார்பில் சேகர் ஆகியோர் கண்டன உரையாற்றி, இன்சூரன்ஸ் துறையை முழுமையாக அன்னிய முதலீட்டிற்கு திறப்பது பொதுத்துறை நிறுவனங்களின் நலனுக்கும், ஊழியர்களின் உரிமைகளுக்கும், பொதுமக்களின் பாதுகாப்புக்கும் எதிரானது என சுட்டிக்காட்டினர்.

சிஐடியு மாநில துணைத் தலைவர் ரசல் நிறைவுரையாற்றி, இந்த மசோதாவை திரும்பப்பெறும் வரை போராட்டங்கள் தொடரும் என எச்சரிக்கை விடுத்தார். மகளிர் துணைக்குழு இணை அமைப்பாளர் ரமணி நன்றி கூறினார்.