திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் கடந்த 22ஆம் தேதி தொடங்கி, வரும் 27ஆம் தேதி சூரசம்ஹாரம் மற்றும் 28ஆம் தேதி திருக்கல்யாண நிகழ்வுடன் நிறைவு பெறுகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பெருமளவில் வருகை தரும் நிலையில், திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் (பொறுப்பு) சந்தோஷ் ஹடிமணி மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் இன்று திருச்செந்தூரில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

அவர்கள், திருக்கோவில் வளாகம், சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரை பகுதி, கோவில் சுற்றுவட்டார சாலைகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களை பார்வையிட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக போக்குவரத்து மாற்றங்கள் உள்ள சாலைகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களில் அறிவிப்பு பலகைகள் தெளிவாக வைக்கப்பட வேண்டும் எனவும், விழா நாள்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த சிறப்பு பாதுகாப்பு படையினரை நியமிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

இந்த ஆய்வின்போது திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார், கோவில் இணை ஆணையர் ராமு மற்றும் பல காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், திருவிழாவின் முக்கிய நாளான 26 மற்றும் 27ஆம் தேதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் சிறப்பு போக்குவரத்து கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களைத் தவிர, கனரக மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் திருச்செந்தூர் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருநெல்வேலி, சாத்தான்குளம், உவரி, குரும்பூர், குலசேகரன்பட்டினம் உள்ளிட்ட வழித்தடங்களில் திருச்செந்தூர் வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று வழித்தடங்கள் மூலம் செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்று வழித்தடங்களாக ஆறுமுகநேரி டி.சி.டபிள்யூ. ஜங்ஷன், நல்லூர் ‘வி’ ஜங்ஷன், ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், காயாமொழி, பரமன்குறிச்சி, உடன்குடி வழிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், “கந்தசஷ்டி திருவிழாவின் சிறப்பாக நடைபெற காவல்துறையினருக்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்” என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.