தூத்துக்குடி துறைமுகத்தை ஒட்டிய முள்ளக்காடு, முத்தையாபுரம், புல்லாவழி, பழையகாயல் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் நடைபெற்று வரும் பாரம்பரிய உப்பளத் தொழில் பாதிக்கப்படாமல் கப்பல் கட்டும் விரிவாக்கத் தளம் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, உப்பள தொழிலாளர்கள் தொழிற் சங்கமான சி.ஐ.டி.யு. மற்றும் உற்பத்தியாளர் சங்கம் இணைந்து இன்று ஒருநாள் தர்ணா போராட்டத்தை தொடங்கி நடத்தினர்.

போராட்டத்துக்கு தொழிற்சங்க பொதுச் செயலாளர் பொன்ராஜ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராமசாமி, சங்கரன், மணவாளன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் பேச்சிமுத்து விளக்க உரையாற்றினார்.

அவர் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் வைப்பார் பகுதியில் 1200 ஏக்கர் மற்றும் கடலோரப் பகுதிகளில் தரிசு நிலங்களாக உள்ள 2000 ஏக்கர் நிலங்களை பயன்படுத்தி கப்பல் கட்டும் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாநிலச் செயலாளர் சண்முகம் முதலமைச்சரை நேரில் சந்தித்து கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

முன்னதாக போராட்டத்தை தொடங்கி வைத்த உற்பத்தியாளர் சங்கச் செயலாளர் சேகர், “கடந்த 93 ஆண்டுகளாக இப்பகுதியில் நிலத்தை சீர்படுத்தி உப்பு உற்பத்தி தொழில் நடைபெற்று வருகிறது. ஒரு தொழிலை அழித்து மற்றொரு தொழிலை உருவாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாது. எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார். மேலும், “இந்தப் போராட்டம் தொடரும், எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி வரும் புதன்கிழமை (8.10.2025) முத்தையாபுரம் பஜாரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்” என்றும் அறிவித்தார்.

இந்தப் பிரச்சார தர்ணாவில் நிர்வாகிகள் மந்திரமூர்த்தி, பொன்ராஜ், சின்னராஜ், முகேஷ், சண்முகவேல், பால சுப்பிரமணியன், ஈபால், சிவாகர், பாஸ்கர், பரமசிவன், லிங்கம்மாள், ஜோதிபாசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டப் பிரச்சாரம் முள்ளக்காடு, ரட்சனியாபுரம், முத்தையாபுரம், பழையகாயல் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.