தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை தொலைக்காட்சி கூட்டமைப்பின் சார்பில் பத்திரிகையாளர்களுக்கு மானிய விலை பட்டா வழங்க கோரி, மாவட்ட ஆட்சியரிடம் தலைவர் A. பிரான்சிஸ் தலைமையில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் 1986 அக்டோபர் 26ஆம் தேதி முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களால் உருவாக்கப்பட்டது. தற்போது 39 ஆண்டுகள் கடந்தும், இம்மாவட்டத்தில் பத்திரிகையாளர்களுக்கு ஒருமுறையும் மானிய விலை பட்டா வழங்கப்படாதது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி 2019ஆம் ஆண்டு தூத்துக்குடி வருகை தந்தபோது கூட்டமைப்பின் சார்பாக மனு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகத்திலிருந்து 2021 ஜூன் 15 அன்று (மனு எண்: A.37780) உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

அதன்பின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களுக்கும் 2021 அக்டோபர் 8ஆம் தேதி மனு அளிக்கப்பட்டது. மேலும், 2023ஆம் ஆண்டு பெரும்வெள்ளத்தை பார்வையிட வந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் மனு வழங்கப்பட்டிருந்தது.

எனினும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது பத்திரிகையாளர்களிடையே மனவருத்தத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

“இந்திய அரசின் நான்காம் தூண் எனக் குறிப்பிடப்படும் பத்திரிகையாளர்களின் நலனுக்காக மானிய விலை பட்டா வழங்குவது தாமதமாகுவது ஜனநாயகத்திற்கே எதிரானது,” என தலைவர் A. பிரான்சிஸ் தெரிவித்தார்.

வரவிருக்கும் தேர்தலுக்கு முன் 2025ஆம் ஆண்டுக்குள் மானிய விலை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.