ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெற்று வரும் கந்தசஷ்டி திருவிழா 2025, கடந்த அக்டோபர் 22ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி, கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன்பிறகு, அக்டோபர் 28ஆம் தேதி திருக்கல்யாண வைபவம் கலைஞர்கள் மற்றும் பக்தர்களை கவரவுள்ளது.

இந்த முக்கிய திருவிழா நிகழ்வுகளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை வழங்கியுள்ளது. அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரசு அலுவலகங்கள் மற்றும் ஊழியர்கள் இந்த விடுமுறைக்கு உட்பட்டவரல்ல என்றும், வரும் நவம்பர் 8ஆம் தேதி (இரண்டாம் சனிக்கிழமை) வேலை நாளாக மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் முழுவதும் பக்தி பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில், சுற்றுலா துறை மற்றும் காவல்துறை இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.