தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊராட்சி நிதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மொத்தம் 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு பொதுநலக் கட்டுமானப் பணிகளுக்கு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

மு.புதுக்கிராமம் ஊராட்சிக்குட்பட்ட பக்கப்பட்டி கிராமத்தில் மாவட்ட ஊராட்சி நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. இக்கலையரங்கம் கிராம மக்களின் சமூக, கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு பயனுள்ளதாக அமையும் என தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், மு.கோவில்பத்து ஊராட்சி முறப்பநாடு கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அருள்மிகு கைலாசநாதர் கோவில் அருகே தாமிரபரணி ஆற்றங்கரையோரம் கோவிலுக்கு வரும் பெண்களின் வசதிக்காக பெண்கள் உடை மாற்றும் அறை கட்டும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த வசதி பெண்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்படுகிறது.

மேலும், கீழபுத்தனேரி ஊராட்சிக்குட்பட்ட கல்லடியூர் கிராமத்தில் மாவட்ட ஊராட்சி நிதியில் இருந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிறிய சமுதாய நலக்கூடம் கட்டும் பணிகளும் தொடங்கப்பட்டன. இந்நலக்கூடம் திருமணங்கள், கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பயன்படும் என கூறப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகராஜா நயினார், ஜான்சிராணி, உதவி பொறியாளர்கள் மாரியப்பன், தளவாய், பணி மேற்பார்வையாளர் சிவகுமார், வருவாய் ஆய்வாளர் மாதவன், ஒன்றிய கழக செயலாளர் ராமசாமி, ஒன்றிய துணை செயலாளர்கள் வீரபாகு, சுரேஷ்குமார், மாவட்ட பிரதிநிதி முருகன், இளைஞரணி சஞ்சய் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த வளர்ச்சிப் பணிகள் நிறைவேறுவதன் மூலம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தின் கிராமப்புற பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேலும் மேம்படும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.