தூத்துக்குடியில் அதிமுக மாணவரணி சார்பில், மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் புரட்சித் தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்களின் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் சாதனைகளை மாணவர்களுக்கு நினைவுபடுத்தும் வகையில், ஜெ மடிக்கணினி சாதனை விளக்கத் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

ஜெ. அவர்களின் ஆட்சிக் காலத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடங்கி சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த பல லட்சம் மாணவர்கள் பயனடைந்து, கணினி அறிவில் திறன் பெற்று உயர்ந்துள்ளனர். ஜெ. அவர்களின் மறைவுக்குப் பிறகும், முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் இந்த திட்டம் தொடர்ந்தது. ஆனால், 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்த பிறகு, மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டதால், ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஜெ. அவர்களின் மடிக்கணினி திட்டத்தின் மகத்துவத்தை மாணவர்களிடம் எடுத்துச் செல்லும் நோக்கில், அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமியின் ஒப்புதலுடன், தமிழகம் முழுவதும் நோட்டீஸ் விநியோகம் செய்யும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, வ.உ.சி. கல்லூரி, காமராஜ் கல்லூரி, அரசு தொழில்நுட்பக் கல்லூரி (பாலிடெக்னிக்) உள்ளிட்ட இடங்களில், தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ் தலைமையில் மாணவர்களிடையே ஜெ மடிக்கணினி சாதனை விளக்கத் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், 2026ஆம் ஆண்டு எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் போது, அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டது. மேலும், அதிமுக அரசின் மாணவர்கள் நலன் காக்கும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் மாணவர்களிடம் விளக்கிக் கூறப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி இணை செயலாளர் அலெக்ஸ் ஜி, துணை செயலாளர் ஈஸ்வர், மேற்கு பகுதி மாணவரணி செயலாளர் சுப்பிரமணி, தலைமை இளம் பேச்சாளர் பெவின் குமார், ஐடி விங் இணை செயலாளர் சகாயராஜா, சொக்கலிங்கம், உதயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.