தூத்துக்குடி துறைமுக மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் 7 நாள் சிறப்பு முகாம் முத்தையாபுரம் சாண்டி கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது.

முகாமை பள்ளி தலைமை ஆசிரியர் சர்மிளா ஜெனிதா தொடங்கி வைத்தார். சாண்டி கல்வி குழும துணைத் தலைவர் சாண்டி மற்றும் கல்வியியல் கல்லூரி முதல்வர் சத்தியசீலி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

முகாம் நாட்களில் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் சமூக நலத்திட்டங்கள் நடத்தப்பட்டன. முத்தையாபுரம் 53-வது வார்டு கவுன்சிலர் முத்துவேல் தலைமையில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்ற தலைப்பில் ஊக்கமூட்டும் சொற்பொழிவு, சுற்றுப்புறத் தூய்மை பணிகள், வேளாண்மை சார்ந்த உயர்கல்வி வழிகாட்டுதல், மரம் நடுதல், சட்ட விழிப்புணர்வு, யோகா பயிற்சி, ஓவியம் மற்றும் கைவினைப் பயிற்சி, தெற்கு மண்டலம் நுண்உரம் செயலாக்க மையம் பார்வை, விளையாட்டு போட்டிகள், டிஜிட்டல் கல்வி மற்றும் சமூகவலைதள விழிப்புணர்வு ஆகியவை சிறப்பாக நடைபெற்றன.

மேலும், 'போதையில்லா தமிழகம்' என்ற தலைப்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி முத்தையாபுரம் உதவி காவல் ஆய்வாளர் வடிவேல் தலைமையில் நடந்தது.

முகாமின் நிறைவு விழாவில் தலைமை ஆசிரியர் சர்மிளா ஜெனிதா, முதுகலை ஆங்கில ஆசிரியர் சரவணன் மற்றும் முதல்வர் சத்தியசீலி சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மாணவர்களுக்கு பாராட்டுச் செய்திகளை வழங்கினர்.

7 நாள் முகாமை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ராஜலட்சுமி மற்றும் உதவி திட்ட அலுவலர் கண்ணன் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.