சர்வதேச சைகை மொழி தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட காது கேளாதோர் முன்னேற்ற மற்றும் நல்வாழ்வு சங்கத்தினர் இன்று (23.09.2025) மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி அவர்களை சந்தித்தனர்.

அப்போது, மாநகராட்சி பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு செய்கை மொழி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்த வேண்டும் என சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.

இதற்கு பதிலளித்த மேயர் ஜெகன் பெரியசாமி, “உங்கள் கோரிக்கையை நான் கவனமாக எடுத்துக்கொண்டுள்ளேன். வருங்காலங்களில் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு செய்கை மொழி விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து நிறைவேற்றித் தருகிறேன்” என்று உறுதி அளித்தார்.

இந்த சந்திப்பில், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான ராமகிருஷ்ணன், பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், அந்தோணி மார்ஷலின், சங்க பொது செயலாளர் மெய்கண்டன் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.