தூத்துக்குடி மாவட்டம் தினந்தோறும் தொழில், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வெளியூர் பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். குறிப்பாக ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் (பழைய பேருந்து நிலையம்) வழியாக பலர் நகரின் பல பகுதிகளுக்கு பயணம் செய்கின்றனர்.

ஆனால், இங்கு பயணிகள் தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காக — குறிப்பாக குளியலறை அல்லது ஆடைமாற்ற வசதிகளைப் பயன்படுத்துவதற்கான அரசு (மாநகராட்சி ) அல்லது தனியார் வசதிகள் இல்லாததால் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

தனியார் விடுதிகளில் சிலர் குளித்து விட்டு ஆடைமாற்றம் செய்ய விரும்பினாலும், அதற்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், இதனால் பயணிகள் பொருளாதார ரீதியாகவும் சிரமப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

“முன்னதாக தூத்துக்குடியில் பழைய பேருந்து நிலையத்தில் இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்தில் குளியல் மற்றும் ஆடைமாற்ற வசதிகள் இருந்தன. ஆனால் தற்போது அவை இல்லை. மற்ற மாவட்டங்களில் இவ்வசதிகள் மக்கள் நலனுக்காக சீராக இயங்கி வருகின்றன. ஆனால் தூத்துக்குடியில் மட்டும் இது இல்லாதது வருத்தம் அளிக்கிறது,” என பயணிகள் கூறுகின்றனர்.

இதனால், தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் மற்றும் முக்கியப் பகுதிகளில் இலவசம் அல்லது குறைந்த கட்டணத்தில் குளியல் மற்றும் ஆடைமாற்ற வசதி ஏற்படுத்தி, வெளியூர் பயணிகள் பயன் பெறும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.