தூத்துக்குடி திருமந்திரநகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டு ஐப்பசி மாத திருவிழா ஆன்மிக மகிழ்வுடன் நடைபெற்று வருகிறது.

இன்று (13.11.2025) காலை நடைபெற்ற திருத்தேர் ரதாரோஹணம் மற்றும் தேரோட்ட பவனி விழாவில், தூத்துக்குடி முதன்மை நீதிமன்ற நீதிபதி வசந்தி திருத்தேரை வடம்பிடித்து பவனியை தொடங்கி வைத்து விழாவை சிறப்பாக துவக்கி வைத்தார்.

இந்த பவனியில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, இந்து சமய அறநிலையத்துறை அலுவலர் மு.வள்ளிநாயகம், தக்கார் தமிழ்ச்செல்வி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கள் கந்தசாமி, செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து சிறப்பு செய்தனர்.

பவனியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு “ஓம் நமஃ சிவாய” என முழங்கினர். தீபாராதனை வழிபாடுகளில் ஈடுபட்டு இறை அருளைப் பெற்றனர்.

திருவிழாவின் நிறைவாக வரும் நவம்பர் 15 (சனிக்கிழமை) அன்று மாலை 8.00 மணி முதல் 9.00 மணிக்குள் உத்திர நட்சத்திரம் – ஏகாதசி கூடிய சுபநாளில், ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.

பெரும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு இறை அருளைப் பெற விழா நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது.