மேனாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 16 நவம்பர் 2024 அன்று வெளியிட்ட அப்போஸ்தலிக்க சுற்றுமடல் அறிவுறுத்தலின்படி, இறை இயேசுவின் யூபிலி ஆண்டு 2025-ஐ முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 9ஆம் தேதி உலகளாவிய திருஅவைகளில் அந்தந்த மறைமாவட்டத்தில் பிறந்த புனிதர்கள், அருளாளர்கள், வணக்கத்துக் குரியவர்கள், இறையடியாளர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து கொண்டாடுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஸ்டீபன் அவர்கள், அனைத்து பங்கு தந்தையர்களுக்கும் INTER NOS வழியாக திருத்தந்தையின் அறிவுறுத்தலை நினைவூட்டியதுடன், தங்களின் பங்குகளில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துமாறு கேட்டுக் கொண்டார்.

இதனை முன்னிட்டு, 08.11.2025 அன்று தூத்துக்குடி நற்செய்தி நடுவகத்தில் நடைபெற்ற மறைமாவட்ட மேய்ப்பு பணி பேரவை கூட்டத்தில், புனிதர் ஏற்பாட்டு குழு வழியாக வடக்கன்குளம் மறைவட்ட முதன்மை குருவும், மறைமாவட்ட புனிதர் ஏற்பாட்டு ஒருங்கிணைப்பாளருமான பேரருட்திரு கிறிஸ்டியான் அவர்களிடம் இறையடியாளர் படங்கள் ஒப்படைக்கப்பட்டன. அவை பங்கு தந்தையர்கள் வழியாக அனைத்து பங்குகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து 09.11.2025 அன்று வடக்கன்குளம் பங்கு புனித திருக்குடும்ப ஆலயத்தில், இறையடியார் அந்தோனி சூசைநாதர் மற்றும் அகுஸ்தின் பெரைரா அவர்கள் அருளாளர் நிலை பெற வேண்டி சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.

ஜெபமாலை தாசர் துறவற சபைகள், தூத்துக்குடி மறைமாவட்ட குருக்கள், மதுவிலக்கு சபையினர், பனிமய மாதா வாலிபர் சபையினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு திருப்பலியில் இணைந்து ஜெபித்தனர். இந்நிகழ்வை பேரருட்திரு கிறிஸ்டியான் மற்றும் பேரருட்திரு ஜான்சன் ஆகியோர் இணைந்து வழிநடத்தினர்.

இந்த விழாவின் மூலம் இறையடியார்களின் நம்பிக்கை, அர்ப்பணிப்பு, புனித வாழ்வை இளம் தலைமுறைக்கு எடுத்துரைத்து புனிதத்தில் வளர அழைப்பு விடுக்கப்பட்டது.

அருள்பணி ஜெயந்தன் டி கிரேஸ்
இயக்குநர், பரிசுத்த அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை, போதை நோய் நலப்பணிக்குழு, ஆயர் இல்லம், தூத்துக்குடி.