தமிழகத்தின் பெருமையாக நடைபெறவுள்ள 14ஆவது ஆடவர் ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை போட்டிக்கான கோப்பை அறிமுக நிகழ்ச்சி இன்று (13.11.2025) தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திமுக துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி எம்.பி. உலகக் கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் சர்வதேச ஹாக்கி சம்மேளனம் இணைந்து நடத்தும் இப்போட்டி வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை சென்னை மற்றும் மதுரையில் நடைபெற உள்ளது. இந்தியா, அர்ஜென்டினா, சீனா, நியூசிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட 24 நாடுகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. வெற்றி அணிக்கான உலகக்கோப்பையை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அறிமுகப்படுத்தும் நோக்கில் வாகனப் பேரணி நடைபெற்று வருகிறது.

கோவில்பட்டியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், எம்.எல்.ஏ.க்கள் ஜி.வி. மார்கண்டேயன், ஊர்வசி எஸ். அமிர்தராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, நகரமன்ற தலைவர் கா. கருணாநிதி, ஹாக்கி வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.