தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைந்துள்ள கரிசல்காட்டு இலக்கியத்தின் முன்னோடியும், சிறந்த எழுத்தாளருமான கி. ராஜநாராயணன் அவர்களின் நினைவரங்கத்தை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி. நேரில் பார்வையிட்டார்.

அப்போது, எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களின் படைப்புகள், புகைப்படங்கள் உள்ளிட்ட நினைவுச் சின்னங்களைப் பார்வையிட்ட அவர், மின்னணு நூலகத்தில் உள்ள பார்வையாளர்கள் பதிவேட்டில் தனது நினைவுக் குறிப்பை பதிவு செய்தார்.

இந்த நிகழ்வில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகர்மன்றத் தலைவர் கா.கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சி, தமிழ்க் கரிசல் மண்ணின் எழுத்துப் பாரம்பரியத்திற்கும், கி.ராஜநாராயணன் அவர்களின் இலக்கியச் செல்வத்திற்கும் மரியாதை செலுத்தும் நினைவாக அமைந்தது.