தூத்துக்குடி மாவட்டம் வி.வி.டி. சிக்னல் அருகே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வு (S.I.R) நடவடிக்கைக்கு எதிராக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்த்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான திருமதி கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையில், கூட்டணி கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டு, “வாக்குரிமையை பறிக்க முயலும் பாஜக அரசை எதிர்த்து போராடுவோம்” எனக் கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி., “இந்த S.I.R என்ற பெயரில் நடக்கும் நடவடிக்கை, வாக்காளர் பட்டியலில் இருந்து மக்களின் பெயர்களை நீக்குவதற்கான பாஜக அரசின் சதி முயற்சி” எனக் கடுமையாக குற்றம் சாட்டினார்.

அவர் மேலும் கூறினார் “2002ஆம் ஆண்டு நடைபெற்ற சீராய்வில் மக்களுக்கு ஆறு மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் இப்போது வெறும் ஒரு மாதத்தில் படிவங்களைச் சமர்ப்பிக்க வேண்டும், 10 நாளில் திருப்பி வழங்க வேண்டும் எனக் கூறப்படுவது சந்தேகத்துக்கிடமானது. ஒருவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால், அதை மீண்டும் சேர்க்க பல சிரமங்கள் உள்ளது. தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், இத்தகைய நடவடிக்கைகள் மக்கள் வாக்குரிமையை பறிக்கும் முயற்சியாகும்.”

மேலும், “ஹரியானா, பீகார், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பாஜக ஆட்சியில் கோடிக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதேபோல் தமிழ்நாட்டிலும் இதே தந்திரத்தை மேற்கொள்ள முயற்சி நடக்கிறது. இது அரசியல் சதி” என்றும் அவர் தெரிவித்தார்.

அதிமுக தலைவரை கடுமையாக விமர்சித்த கனிமொழி கூறினார் “எடப்பாடி பழனிசாமி அவர்கள் ‘எஸ்.ஐ.ஆர் வேண்டும்’ என்று வழக்கு போட்டுள்ளார். முதலாளிக்கு நான் தான் சிறந்த அடிமை என்று காட்டிக்கொள்வதற்காகவே அவர் இதைச் செய்கிறார். தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை பறிக்கும் S.I.Rக்கு ஆதரவாக நிற்கும் அதிமுக, மக்கள் நலனுக்குப் புறம்பான கட்சியாக மாறியுள்ளது.”

“வாக்குரிமை என்பது நம் அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமை. அதைக் காப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை. நாளை நம் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லையெனில், நம் குடிமகன் என்ற அடையாளமே கேள்விக்குறியாகி விடும். அதனால் அனைவரும் ஒன்றிணைந்து, உரிமைக்காக போராட வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் ஏ.பி.சி.வி. சண்முகம், மதிமுக அரசியல் ஆலோசனை குழு செயலாளர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மெபூப், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டு தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக கோஷமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் முழுவதும் “வாக்குரிமையை காப்போம் – எஸ்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்க!” என முழக்கங்களுடன் உற்சாகமாக நடைபெற்றது.