தமிழகம் முழுவதும் பல்வேறு மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் தூய்மை பணிகளை காண்ட்ராக்ட் முறையில் மேற்கொண்டு வரும் ‘அவர் லேண்ட்’ நிறுவனம், தொழிலாளர்களுக்கு எதிரான செயல்பாடுகள் மூலம் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.

குறிப்பாக தூத்துக்குடி மாநகராட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக தூய்மை பணியில் ஈடுபட்டு வரும் 1000க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், அரசு நிர்ணயித்த சம்பளம் முழுமையாக வழங்கப்படாமல் வஞ்சிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். மேலும், பணியாளர்களின் பிஎஃப் தொகையில் மோசடி நடைபெறுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

‘அவர் லேண்ட்’ நிறுவனத்தின் மேலாளர்கள் ராகேஷ், முருகேசன் ஆகியோர் மாநகராட்சி நிர்வாக உத்தரவுகளுக்கும், தூய்மை பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் கட்டுப்படாமல், ஆணவப்போக்கில் செயல்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பணியாளர்களுக்கும் நிறுவன நிர்வாகத்துக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது.

சமீபத்தில் தூய்மை பணியாளர் சங்கத் தலைவர் பொன்ராஜ் என்பவரை இடைக்கால பணிநீக்கம் செய்ததை கண்டித்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாநகராட்சி மேயர் ஜெகன் பேச்சுவார்த்தை நடத்தி, சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்படும் என உறுதி அளித்தார். ஆனால் மூன்று நாட்கள் கடந்தும் அந்த உத்தரவு ரத்து செய்யப்படவில்லை; பொன்ராஜ் பணியில் மீண்டும் அனுமதிக்கப்படவும் இல்லை.

மேயர் உறுதியை மேற்கோள் காட்டி ‘அவர் லேண்ட்’ நிறுவன அலுவலகத்திற்குச் சென்ற தூய்மை பணியாளர்களிடம்,
“நாங்கள் பத்து மாநகராட்சிகளில் ஒப்பந்தப் பணிகளை செய்து வருகிறோம். யாருடைய உத்தரவுக்கும் கட்டுப்பட மாட்டோம்”
என நிறுவன தரப்பில் கூறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இது மாநகராட்சி நிர்வாகத்தின் அதிகாரத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் சந்தித்து வரும் இந்த தொடர்ச்சியான பிரச்சனைகள், ஆளுங்கட்சியான திமுகவுக்கு தலைவலியாக மாறும் சூழல் உருவாகியுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் உத்தரவுகள் பிறப்பித்தும், ‘அவர் லேண்ட்’ நிறுவனம் அவற்றை அமல்படுத்தாத நிலை பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து புகார்கள் எழுந்தும் தீர்வு காணப்படாத நிலையில்,
‘அவர் லேண்ட்’ நிறுவனத்தின் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்வதே நிரந்தர தீர்வு என தூய்மை பணியாளர்களும் தொழிற்சங்கங்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

மாநகராட்சி மேயரும், ஆணையரும் பல உத்தரவுகளை பிறப்பித்தும் அவை மதிக்கப்படாதது, மாநகராட்சி நிர்வாகத்தின் செயல்திறன் குறித்து கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.