தூத்துக்குடி சில்வர்புரம் பகுதியில் செயல்பட்டு வரும் லூசியா மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையம் மனிதநேயத்தின் மணம் வீசும் ஒரு சிறப்பு நிகழ்வை நடத்தியது. கடந்த செப்டம்பர் 15ம் தேதி இந்த மையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்வு நடைபெற்றது. இதில் பலரும் கலந்து கொண்டு தங்களுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையை தேர்வு செய்தனர். பின்னர் இரு குடும்பங்களின் ஆலோசனைக்குப் பிறகு 5 ஜோடிகள் ஒருவரை ஒருவர் வாழ்க்கைத் துணையாக ஏற்க முடிவு செய்தனர்.

அதன்படி, 10.12.2025 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு ஸ்டீபன் தலைமையில் இவ்விழுக்கனமான திருமண நிகழ்ச்சி நடை பெற்றது. திருமணத்துக்கு பின் மணமக்கள் மகிழ்ச்சியின் அடையாளமாக கேக் வெட்டி கொண்டாடினர்.

ஒவ்வொரு ஜோடிக்கும் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான சிறப்பு திருமண பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. அதில் தங்கத்தாலி, திருமண உடைகள், மிக்ஸி, கிரைண்டர், தொலைக்காட்சி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கட்டில், மெத்தை, தலையணை, பீரோ, சேர், குக்கர், மின்விசிறி, சூட்கேஸ், ஸ்டூல், சமையல் உபகரணங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான பலசரக்கு, அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்கள் அடங்கும்.

இந்த மனம் குளிர்விக்கும் நிகழ்வில் அருட்பணியாளர்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், நன்கொடையாளர்கள், மருத்துவர்கள், சங்க நிர்வாக உறுப்பினர்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் பலர் கலந்து கொண்டு புதிதாக இணைந்த வாழ்வுத்துணைகளுக்கு நல்லாசி வழங்கினர்.

இந்நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் லூசியா இல்ல இயக்குனர் ஜான் பென்சன், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர். மனிதநேயத்திற்கும், மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் புதிய நம்பிக்கையை விதைக்கும் இத்தகைய நிகழ்வுகள், தூத்துக்குடி சமூகத்தின் அன்பும் ஒற்றுமையும் மீண்டும் நிரூபிக்கின்றன.