தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் இயற்றப்பட்ட நாளை நினைவுகூரும் வகையில், ஆட்சிமொழிச் சட்ட வாரம் டிசம்பர் 17 முதல் 27 வரை அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இரண்டாம் நாளில் வியாபார தளங்களில் தமிழ்ப்பெயர்களை எழுத வேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு பேரணி தூத்துக்குடி பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் இருந்து துவங்கியது. தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர் இளங்கோ தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியை தொழிலாளர் உதவி ஆணையர் மின்னல்கொடி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பேரணி, தூத்துக்குடி உதவி ஆட்சியர் அலுவலகம் வழியாக சென்று கடற்கரை பகுதியில் நிறைவடைந்தது. செல்லும் வழியில் வியாபார தளங்களில் தமிழ்ப்பெயர்களை வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

ஆட்சிமொழி தொடர்பான வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகளை ஏந்திய கல்லூரி மாணவ, மாணவிகள் பேரணியில் உற்சாகமாக கலந்து கொண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பேரணி துவங்குவதற்கு முன்பு தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்து தமிழ் வளர்ச்சித் துணை இயக்குனர் இளங்கோ மாணவர்களிடம் துவக்கவுரையாற்றினார்.

இறுதியில் தமிழ் வளர்ச்சியை மேம்படுத்த அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள் முத்தாலங்குறிச்சி காமராசு, மாரிமுத்து, ஜெகஜீவன் ராம், திருக்குறள் பேரவை அன்பழகன், அய்யனராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், பேரணியில் பங்கேற்ற காமராஜர் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.