தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமையகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் விருப்ப மனு வழங்கலாம் என, அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான மாண்புமிகு எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த 15ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பல்வேறு தொகுதிகளில் போட்டியிடுவதற்காகவும், எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையுடனும் பலர் விருப்ப மனுக்கள் வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திரு. எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வரும் 23ஆம் தேதிக்குள் தெற்கு மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருச்செந்தூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், சென்னை எம்.ஜி.ஆர். மாளிகையில் விருப்ப மனு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில், தூத்துக்குடியைச் சேர்ந்த முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, டூவிபுரத்தில் அமைந்துள்ள அதிமுக அலுவலகத்தில் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திரு. எஸ்.பி. சண்முகநாதனை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார். அவர், வரும் 23ஆம் தேதிக்குள் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, இதற்கு முன்பு நகர்மன்ற உறுப்பினராகவும், மாவட்ட மகளிரணி செயலாளராகவும், தூத்துக்குடி மாநகர மேயராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக மகளிரணி தலைவியாக பொறுப்பு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.