தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி, புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் சீண்டல் செய்த ஆசிரியர் தியாகராஜனை காவல்துறை இதுவரை கைது செய்யாமல் இருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று தமிழ்நாடு மக்கள் நல இயக்க மாநில தலைவர் சாமு காந்தி இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

பள்ளியில் படிக்கும் மாணவியை பாலியல் தொல்லை கொடுப்பது “வேலியை பயிர் மேய்ந்த கதையாக” மாறி, நம்பிக்கைக்குரிய ஆசிரியர் ஒருவர் இத்தகைய செயலில் ஈடுபடுவது சமூகத்தையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த சம்பவம் பாதிக்கப்பட்ட மாணவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

குற்றவாளி தியாகராஜனை உடனடியாக கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். தமிழக அரசு இந்த வழக்கில் இரும்புக் கரம் கொண்டு செயல்படாமல் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குற்றவாளி கைது செய்யப்படாமல் தொடர்ந்தால், தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் சமூக செயற்பாட்டாளர்களுடன் இணைந்து விரைவில் விளாத்திகுளத்தில் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தும் எனவும் சாமு காந்தி எச்சரித்துள்ளார்.

இவ்வாறு தமிழ்நாடு மக்கள் நல இயக்க மாநில தலைவர் சாமு காந்தி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.