மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கடத்தப்பட்டுள்ள ஐந்து தமிழர்களை உடனடியாக மீட்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழர் விடுதலைக் களம் சார்பில் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

இந்த போராட்டம், தமிழர் விடுதலைக் களம் மாவட்டத் தலைவர் பரமசிவன் தலைமையில் நடைபெற்றது. மாலியில் வேலைக்காக சென்ற தமிழர்கள் கடந்த நவம்பர் 6ஆம் தேதி ஆயுதம் தாங்கிய கும்பலால் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடத்தப்பட்டுள்ளவர்கள் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டத்தைச் சேர்ந்த கொடியன்குளம் புதியவன், நாரைக்கிணறு பொன்னுத்துரை, மற்றும் கயத்தாறு வட்டம் கலப்பைபட்டி பேச்சிமுத்து, மேலும் தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த இசக்கிராஜா மற்றும் புதுக்குடி தளபதி சுரேஷ் ஆகியோர் ஆவார்கள்.

இவர்கள் மும்பையைச் சேர்ந்த “டிராயிங் ரெயில் லைட்டிங்” என்ற நிறுவனத்தின் கீழ் மின்மயமாக்கல் திட்டப் பணிகளில் சுமார் 100 இந்திய தொழிலாளர்களுடன் பணியாற்றி வந்தபோது இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றது.

இந்த நிலையில், கடத்தப்பட்ட தமிழர்களை பாதுகாப்பாக மீட்கவும், அவர்களின் குடும்பங்களுக்கு தேவையான உதவி மற்றும் நியாயத்தை வழங்கவும் தமிழக அரசும் இந்திய அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழர் விடுதலைக் களகத்தினர் கோஷமிட்டனர்.

மாவட்டத் தலைவர் பரமசிவன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “மாலியில் கடத்தப்பட்டுள்ள எங்கள் தமிழர்கள் உயிர் பத்திரமாக வீடு திரும்ப மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மனிதாபிமானச் சம்பவம் — அரசு தாமதிக்காமல் செயல்பட வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.

போராட்டத்தில் தமிழர் விடுதலைக் களத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.