உணவுக் கழகம், துறைமுக தொழிலாளர்களுக்கு ஆதரவாக தூத்துக்குடியில் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று ஐஎன்டியுசி அமைப்புச் செயலாளர் கதிர்வேல் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இந்திய உணவுக் கழகத்தில் கடந்த 1998 முதல் 5000 தொழிலாளர்கள் இன்று வரை தற்காலிக பணியாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். நிரந்தர தொழிலாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படும் என்ற அடிப்படையில் அவர்கள்  பணியில் சேர்ந்தனர் ஆனால் நிர்வாகம் தெரிவித்தபடி ஊதியம் வழங்கவில்லை.

உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் 25 வருட சட்டப் போராட்டத்திற்கு பின் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தீர்ப்பை பெற்றோம் டெல்லி மத்திய அரசு தொழிலாளர் நல ஆணையம் தீர்ப்பை அமல்படுத்தவில்லை எனவே மீண்டும் மத்திய அரசு மீது வழக்கு தொடர உள்ளோம். தற்போது தூத்துக்குடி துறைமுகத்தில் பொறியாளர் டாக்டர் உள்ளிட்ட பெரிய பதவிகளுக்கு வடநாட்டவருக்கு மட்டுமே பணி நியமனம் வழங்கப்படுகிறது.

தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட கீழ்நிலை பணிகள் மட்டும் நம் பகுதி மக்களுக்கு வழங்கப்படுகிறது. இது மோசமான செயலாகும். விளை பொருள் விளைவிக்கும் விவசாயிகளுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்யப்படவில்லை.

இதை வலியுறுத்தி தான் பஞ்சாப் விவசாயிகள் போராடினார்கள். விவசாயிகள் உணவுக் கழக தொழிலாளர்கள் துறைமுக தொழிலாளர்கள உள்ளிட்ட பல்வேறு தரப்பு தொழிலாளர்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவிலான போராட்டம் ஐஎன்டிசி சார்பில் தூத்துக்குடியில் விரைவில் நடத்தப்பட உள்ளது என்று தெரிவித்தார்.