தூத்துக்குடி மாநகராட்சியின் 3-வது வார்டு எஸ்.எம்.டி. ஹவுசிங் போர்டு காலனி பகுதியில் வைத்து இன்று (10.12.2025) நடைபெற்ற நடப்பு காலாண்டு பகுதி சபா கூட்டம், பகுதி சபா உறுப்பினர்கள் செல்வராஜ், ஜவஹர், பிரபாகரன், ஜெய பிரகாஷ் டேனியல் தலைமையில், 3-வது வார்டு திமுக கவுன்சிலர் ரெங்கசாமி முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகளுக்கு 300 பகுதி சபா குழுக்கள் செயல்பட்டு வருவதோடு, பொதுமக்கள் பங்கேற்பை மேம்படுத்தும் நோக்கில் இக்கூட்டங்கள் காலாண்டு வாரியாக நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந்த கூட்டங்கள் நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையர் சி. ப்ரியங்கா முன்னதாக அறிவித்திருந்தார்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியத் தீர்மானங்கள்

அழகர் ஸ்டோர் முன்பு தேங்கியிருந்த மழைநீரை அகற்றியதற்காக பொதுமக்கள் சார்பில் மேயருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

ஓம் சாந்தி நகர் பகுதியில் தேங்கியிருந்த மழைநீரை அகற்றியதற்காக மேயர் மற்றும் கவுன்சிலருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

ஹவுசிங் போர்டு – கே.டி.சி. நகர் – ஸ்டேட் பேங்க் காலனி வழியாக புதிய மினி பேருந்து சேவை உருவாக்கிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஹவுசிங் போர்டு மற்றும் கே.டி.சி. நகர் பகுதிகளில் விடுபட்ட சாலைகளை அமைத்து வழங்க மாநகராட்சியிடம் கோரிக்கை விடுத்து தீர்மானம் எடுக்கப்பட்டது.

4 டி ஹவுசிங் போர்டு பகுதியில் பெண்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பிங்க் பார்க் குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, மேயருக்கு பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், பொதுமக்களிடம் இருந்து பல மனுக்கள் பெறப்பட்டு, அவற்றுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூட்டத்தில் உறுதிபடுத்தினர்.

கூட்டத்தில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள், பரிந்துரைகள் மற்றும் பிரதேச தேவைகளை பகிர்ந்து கொண்டனர்.