தூத்துக்குடி தமிழ் சாலையில் அமைந்துள்ள பிரஸ் கிளப் அலுவலகத்தில் சரஸ்வதி பூஜை பக்தி பூர்வமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.

ஆண்டுதோறும் வழக்கம்போல், இவ்வாண்டும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு அலுவலகம் வாழை கன்று, குருத்தோலை, மாவிலை தோரணங்கள் கொண்டு அழகாக அலங்கரிக்கப்பட்டது. சரஸ்வதி, விநாயகர், லட்சுமி சுவாமி படங்களுக்கு மாலை அணிவித்து, அவல், பொரி, கடலை, சுண்டல், சர்க்கரை பொங்கல் மற்றும் பல்வேறு பழங்களுடன் நைவேத்யம் சமர்ப்பிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்கள் மக்கள் பணி சிறக்க வேண்டும் என்ற நோக்கில், செய்தி சேகரிக்கும் கருவிகள் சின்னமாக வைக்கப்பட்டு, விளக்கேற்றி, தூப தீப ஆராதனை நடைபெற்றது. இதனால் முழு வளாகமும் பக்தி மணம் கமழ்ந்தது.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் ராஜூ, துணைத் தலைவர் சிதம்பரம், இணைச் செயலாளர் சதீஸ்குமார் ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.

நிகழ்வில் கௌரவ ஆலோசகர்கள் அருண், ஆத்திமுத்து, செயற்குழு உறுப்பினர்கள் லெட்சுமணன், இருதயராஜ், கண்ணன், உறுப்பினர்கள் காதர் முகைதீன், செய்யது அலி சித்திக், மாணிக்கம், ஜெயராமன், கருப்பசாமி, மணிகண்டன் உள்ளிட்டோர், மேலும் பல பத்திரிகையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.