தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் சில பிரிவுகள் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு ஏற்பட்ட சூழ்நிலையை நேரில் அறிந்து கொள்ள திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி நேற்று இரவு (24.11.2025) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மருத்துவமனையின் உள் பிரிவுகள், நோயாளிகள் சந்திக்கும் சிரமங்கள், நீர்த் தேக்கம் மற்றும் தேவையான உடனடி சீரமைப்பு பணிகள் குறித்து மருத்துவர்களிடம் கனிமொழி கருணாநிதி விசாரித்தார். மேலும், மழை காரணமாக ஏற்படும் அவசர தேவைகளை உடனடியாக தீர்க்க தேவையான அதிகாரிகளுக்கு ஆலோசனைகளையும் வழங்கினார்.

அவருடன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் இணைந்து இருந்தனர்.