தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு, இன்று (05.11.2025) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி, தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரின் வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் நடைபெறும் இந்த கூட்டத்தில், புதிதாக 56 மனுதாரர்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்களை நேரடியாக காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் ஆறுமுகம் மற்றும் தீபு ஆகியோரிடம் சமர்ப்பித்தனர்.

மனுதாரர்கள் முன்வைத்த குறைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்த கூடுதல் கண்காணிப்பாளர்கள், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உடனடி விசாரணை மேற்கொண்டு தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பில் வாரந்தோறும் நடைபெறும் இந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டத்தில், காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட மனுக்களின் விசாரணையில் திருப்தி அடையாதவர்கள், மாவட்ட காவல் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தங்களின் குறைகளை தெரிவிக்கலாம் என்றும் மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.