தூத்துக்குடி மாநகரில் கடந்த மாதம் மூன்று நாட்கள் பெய்த மழையால் பல இடங்களில் தேங்கிய மழைநீர் தற்போது அப்புறப்படுத்தப்பட்டு, கொசு உற்பத்தியைத் தடுக்க தீவிர சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாநகரத்தில் கொசு தொல்லை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் தலைமையிலும், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா முன்னிலையிலும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா, சுகாதார அலுவலர்கள் ராஜபாண்டி, ராஜசேகர் உள்ளிட்டோர், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய மேயர் ஜெகன்,

“மாநகரின் 60 வார்டுகளில் 57 வார்டுகளில் எந்தப் பிரச்சினையும் இல்லை. 2, 16, 17வது வார்டுகளில் மட்டும் மழைநீர் தேங்கி இருந்தது. அங்கும் ஆயில் பால் தெளிக்கப்பட்டு, நீர் வடிகால் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. 2021 முதல் 2024 வரை மழை பாதிப்பு எவ்வாறு இருந்தது என்பதை ஆய்வு செய்து வருகிறோம். வருங்காலத்திற்கான வசதிகளைத் திட்டமிடி வருகின்றோம்,” என்றார்.

மேலும் அவர் கூறியதாவது:

தற்போது 74 கொசு அடிக்கும் பம்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன; பக்கீல் ஓடைகளில் ஹெவியா மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

250 சுகாதாரப் பணியாளர்கள் 60 வார்டுகளிலும் சுற்றுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாளை முதல் வீடு வீடாகச் சென்று சோதனை செய்து, டயர், சிரட்டை போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இரும்புக் கடைகள், திருமண மண்டபங்கள் போன்ற இடங்களில் குப்பை, காலி பாட்டில், டம்ளர் போன்றவற்றை குப்பையில் போடாமல் கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநகரில் மொத்தம் 300 கிலோமீட்டர் கழிவு நீர் கான்களில் சுத்தம் செய்யப்பட்டது. அதில் 100 டன் அளவில் பிளாஸ்டிக், டம்ளர், கேரி பைகள் அகற்றப்பட்டன.

மழை பருவம் டிசம்பர் வரை நீடிக்கும் நிலையில் 250 இடங்களில் தனிநபர் நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதில் 147 பேர் பிரச்சினையைத் தீர்த்து வைத்துள்ளனர்.

அத்துடன், நகர் நல அலுவலகம் 14 இடங்களில் இயங்கிவருவதாகவும், இதுவரை டெங்கு நோய்க்கான வழக்குகள் மாநகரத்தில் எங்கும் பதிவாகவில்லை என்றும் மேயர் ஜெகன் தெரிவித்தார்.

இரவில் தேங்கும் குப்பைகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு நேரடி உத்தரவையும் அவர் வழங்கினார்.
மழைக்குப் பிந்தைய தூய்மை நடவடிக்கையில் முழு தீவிரத்துடன் களத்தில் இறங்கியுள்ள தூத்துக்குடி மாநகராட்சி சுகாதாரப் படை, கொசுவை கட்டுப்படுத்தி நகரை ஆரோக்கியமாக மாற்றும் பணியில் முன்னிலை வகிக்கிறது.