தூத்துக்குடியில் மாநகராட்சி மாதாந்திர சாதாரண கூட்டமானது மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று காலை மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால் மற்றும் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

அப்போது 50 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அடிப்படை வசதிகள் குறித்து மேயர் ஜெகன் பெரியசாமியிடம் கவுன்சிலர் சரவணகுமார் மனு ஒன்றை அளித்தார்.

கவுன்சிலர் சரவணகுமார் மேயரிடம் அளித்த மனுவில் தெரிவித்ததாவது :-

தூத்துக்குடி மாநகராட்சி 50 வது வார்டுக்கு உட்பட்ட அமுதாநகர், கிருபைநகர், கிரேஸ் நகர் ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பாதாள சாக்கடை அமைக்கும் பணி நிறைவடைந்த பகுதிகளில் தற்காலிக கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டால் உள்ளது. இதனால் பொதுமக்கள் போக்குவரத்திற்கு பெரும் இடையூறாக உள்ளது. எனவே மேயர் அவர்கள் இந்த பகுதி ஆய்வு செய்து உடனடியாக தற்காலிக கான்கிரீட் சாலை அமைக்க உத்தரவு பிறப்பிக்குமாறும்,

அதோடு 50 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட கணேசன் காலனி 3 வது தெரு தொடர்ச்சி பகுதியில் உள்ள வீடுகளுக்கு ஒவ்வொரு குடிநீர் விநியோகத்தின் போதும் சரியாக குடிநீர் கிடைப்பதில்லை, இந்த புகாரை ஆய்வு செய்த துணை ஆணையாளர் அவர்கள் பிரையன்ட் நகர் OHT யில் இருக்கும் அப்பகுதி சப்ளையை என்.ஜீ.ஓ. காலனி OHT யில் மாற்றி அமைத்தால் குடிநீர் சீராக கிடைக்கும் என கூறியிருந்தார். ஆனால் அப்பணியானது இதுவரை நடைபெறவில்லை, எனவே தாங்கள் இதையும் ஆய்வு செய்து சீரான குடிநீர் மற்றும் தற்காலிக கான்கிரீட் சாலை அமைப்பதற்கு உத்தரவு பிறப்பித்து நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தருமாறு தாழ்மையோடு கேட்டு கொள்கிறேன் என்று மேயரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளார்.

இன்று காலை தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையாளராக பானோத் ம்ருகேந்தர் லால் பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.