தூத்துக்குடி நகரில் காந்தியடிகளின் 157-ஆம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு சார்பில், வ.உ.சி சாலை கிழக்கு மண்டலத்தில் (பழைய மாநகராட்சி அலுவலக வளாகம்) அமைந்துள்ள காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ. ஜெகன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டு காந்தியடிகளின் நினைவுக்கு மரியாதை செலுத்தினர்.

காந்தியடிகளின் உண்மைப் பாதை, அஹிம்சை மற்றும் சமூக நீதி குறித்த பாடங்கள் மக்கள் மனதில் என்றும் நிலைக்க வேண்டும் என நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.