மாணவர்களை போதையிலிருந்து காப்பாற்றும் நோக்கில் போதை ஒழிப்பு உறுதி மொழி பேரணி தூத்துக்குடியில் நடைபெற்றது.

இப்பேரணியை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் டாக்டர் மதன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடக்கி வைத்தார். தொடர்ந்து தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி, காந்திய மக்கள் இயக்கத் தலைவர் ஜேசுதாசன் (வெள்ளப்பட்டி), தூய பெண்கள் மரியன்னை கல்லூரி முதல்வர் அருட்சகோதரி ஜெஸி, தூய பனிமய மாதா பேராலய அதிபர் அருட்தந்தை ஸ்டார்வின், துணை அருட்பங்குத்தந்தை பிரவின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

“ஒழிப்போம்! ஒழிப்போம்! மாணவர்களை சீரழிக்கும் போதைகளை ஒழிப்போம்!” என கோஷங்கள் எழுப்பியபடி பேரணி முன்னேறியது. பேரணி, தூய மரியன்னை கல்லூரி முன்பு தொடங்கி தூய பனிமய மாதா பேராலய கொடிமரம் வரை நடைபெற்றது.

இதில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் செயல்படும் Anti-Drug Cell, NSS, NCC, YRC – Youth Red Cross, FSS, AICUF, இளையோர் இயக்கம், பல்நோக்கு சமூக சேவை சங்கம் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் உட்பட நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் உறுதிமொழி எடுத்து கலந்துகொண்டனர்.

பேரணியின் நிறைவில் உரையாற்றிய மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி, “இளம் தலைமுறையை சீரழிக்கும் போதைப்பொருளை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மாணவர்கள் ஆரோக்கியமாக, விழிப்புணர்வுடன் வளர வேண்டும் என்பது சமூகத்தின் கடமை,” என வலியுறுத்தினார்.