தூத்துக்குடி திருமந்திரநகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலில் திருவிழா விழாக்கள் மங்களகரமாக நடைபெறவிருக்கின்றன.

விச்வாவஸு வருடம் ஐப்பசி 19 (05.11.2025) புதன்கிழமை அஸ்வினி நட்சத்திரம், பெளர்ணமி, சித்த யோகம் கூடிய சுபதினத்தில் காலை 9.15 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் தனுர் லக்னத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான ரதாரோஹணம் மற்றும் திருத்தேர் வடம்பிடித்தல் ஐப்பசி 27 (13.11.2025) வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெறும். இந்நிகழ்வில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தேரோட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

அடுத்து, ஐப்பசி 29 (15.11.2025) சனிக்கிழமை உத்திர நட்சத்திரம், ஏகாதசியும் கூடிய சுபதினத்தில் மாலை 8.00 மணி முதல் 9.00 மணிக்குள் ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் மங்களகரமாக நடைபெற உள்ளது.

இந்நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வள்ளிநாயகம், செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.

ஐப்பசி தேரோட்ட பவனிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, திருத்தேர் திருப்பணி குழுத் தலைவர் A.V.M. முத்துராஜ் மாரிமுத்து, தொழிலதிபர்கள் சண்முகம், ஆனந்தசேகரன், அரிராமகிருஷ்ணன், ரத்னவேல், அழகர் ஜுவல்லர்ஸ் ஜெயராம், 33வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

பெரும் பக்தி உணர்வுடன் நடைபெறவுள்ள இந்த புண்ணிய திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு இறை அருளைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.