தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழை காலத்தை முன்னிட்டு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மேயர் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், வடக்கு மண்டல தலைவர் நிர்மல் ராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி, “தூத்துக்குடி வடக்கு மண்டலத்தில் உள்ள ஐந்து வார்டுகளில் தினசரி குடிநீர் விநியோகம் செய்து வருகிறோம். மீதமுள்ள பகுதிகளுக்கும் விரைவில் தினசரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழைக்குப் பின் கொசு தொற்று பரவாமல் தடுக்க அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக 80 சதவீதம் சுகாதார பணியாளர்கள் முழுமையாக பணியாற்றி வருகின்றனர்,” என்றார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:
“சமீபத்திய மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கியிருந்தது. அவை உடனடியாக மோட்டார்கள் மூலம் அகற்றப்பட்டன. ஆதிபராசக்தி நகரில் இருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வடிகால் வழியாக தண்ணீர் வெளியேறுவதால் சிறிதளவு தாமதம் ஏற்பட்டது. தற்போது காலி மனைகளில் தேங்கி இருக்கும் தண்ணீர் லாரிகள் மூலம் அகற்றப்படுகிறது. இதன் மூலம் கொசு உற்பத்தி தடுக்கப்படும்.”

மேலும், “மழை பெய்த 2 மணி நேரத்துக்குள் தண்ணீர் வடிகால் வழியாக வெளியேறுமாறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வீடுகளில் பழைய டயர்கள், டப்பாக்கள், குளிர்சாதனப் பெட்டிகளில் தண்ணீர் தேக்கி வைக்க வேண்டாம். அவை கொசுக்களுக்கு இனப்பெருக்க தளமாக மாறுகின்றன. கேரி பேக் பயன்பாடு குறைந்துள்ளதும் மகிழ்ச்சிக்குரியது. ஆனால், கொசு ஒழிப்பும் சுத்தமான நகரம் உருவாக்கமும் பொதுமக்களின் ஒத்துழைப்பில் தான் வெற்றிகரமாக முடியும்,” என வலியுறுத்தினார்.

மேலும், “தூத்துக்குடியில் இதுவரை 4000 புதிய தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது புதிய வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படுவதால் சில சாலைகள் தற்காலிகமாக உடைக்கப்பட்டுள்ளன. அவை உடனடியாக சீரமைக்கப்படுகின்றன,” என்றும் கூறினார்.

பின்னர் 52 பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. இதில் பலருக்கு உடனடியாக பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் துணை ஆணையர் சரவணகுமார், நகர நல அலுவலர் சரோஜா, மண்டல ஆணையர் முனீர் அகமது, மாநகராட்சி கவுன்சிலர்கள் கீதா முருகேசன், ரெங்கசாமி, சண்முக கனி, ஜெயசீலி, ஜெயசுதா, காந்திமணி, அந்தோணி மாஸ் கிளீன், பட்டுக்கனி, ஆணையரின் உதவியாளர் துரைமணி, மேயரின் உதவியாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.