தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெருமை மிக்க வரலாற்றில், மாவட்டம் தோறும் கட்சியின் வளர்ச்சியையும் ஒற்றுமையையும் பிரதிபலிக்கும் அலுவலகங்கள் பெருமையாக நிறுவப்பட்டுள்ளன. அந்த வரிசையில், கோவில்பட்டி – இளையரசனேந்தல் சாலையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கோவில்பட்டி மேற்கு நகர திமுக அலுவலகம், வடக்கு மாவட்டத்தின் முக்கியக் கட்டிடமாக உருவாகியுள்ளது.

அங்கு நவீன தமிழகத்தின் சிற்பியும், முத்தமிழறிஞருமான கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி அவர்களின் வெண்கல முழு திருவுருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. தமிழக வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைத்து, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத்தந்தவர், தகவல் தொழில்நுட்பத் துறையை இந்தியாவில் முதல்முறையாக உருவாக்கியவர், இளைஞர்களுக்கான முன்னோடி சிந்தனையாளரான கலைஞரை நினைவுகூரும் விதமாக இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு வரும் அக்டோபர் 28ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை, தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் மதுரை விமான நிலையம் வருகை தந்து, அங்கிருந்து சாலைமார்க்கமாக கோவில்பட்டி சென்று மாலை 6 மணியளவில் புதிய திமுக அலுவலகத்தையும், கலைஞரின் வெண்கல சிலையையும் திறந்து வைக்க உள்ளார்.

இந்நிகழ்வில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தின் கழக நிர்வாகிகள், செயல்வீரர்கள், மூத்த முன்னோடிகள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை அனைவரும் நேரில் வந்து கண்டு மகிழுமாறு அமைச்சர் கீதா ஜீவன் தனது அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளார்.