கல்லூரிக் கல்வி இயக்குநரகம், திருநெல்வேலி பிரிவு சார்பில் 2025–2026 கல்வியாண்டிற்காக “ஆறு கோடி பனைவிதைகள் நட்டிடும் பனைமரக் காப்பு இயக்கம்” மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் கல்லூரி (தன்னாட்சி) தாவரவியல் துறை சார்பில் கல்லூரி வளாகத்தில் பனைவிதை நடு விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தாவரவியல் துறைத் தலைவர் அருட்சகோதரி முனைவர் ஆரோக்யை ஜெனீசியஸ் அல்போன்ஸ் தலைமையிலாக துறை பேராசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

பனைமரம் சுற்றுச்சூழல் சமநிலைக்கு முக்கிய பங்காற்றுவதாகவும், நீர்வளத்தை பாதுகாக்கும் திறன் கொண்டதாகவும் பேசப்பட்டு, இளம் தலைமுறையில் பனைமரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

மேலும், நீர்நிலைகளுக்கு அருகில் வசிக்கும் மாணவிகள் தாவரவியல் துறையிலிருந்து பனைவிதைகளை பெற்றுக்கொண்டு தங்களது பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்கள், ஓடைகள் அருகில் அவற்றை நட்டிடுமாறு தாவரவியல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

இந்த விழா பனைமர வளர்ச்சிக்கான சமூகப் பொறுப்புணர்வை மாணவமணிகளிடையே வளர்த்ததோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கல்லூரியின் உறுதியான பங்கையும் வெளிப்படுத்தியது.