வடகிழக்கு பருவமழை காரணமாக தூத்துக்குடி மாநகரில் கடந்த வாரம் பெய்த கனமழையால் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி இருந்தது. அதில் முக்கியமாக நகரின் மையப்பகுதியில் உள்ள சி.வ. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும் மழைநீர் தேங்கியிருந்தது. இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் சார்பில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அவர்களுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மழைநீர் நிலையைப் பார்வையிடுவதற்காக மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா ஆகியோர் பள்ளி வளாகத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

பார்வையின்போது மேயர் ஜெகன் பெரியசாமி, “பள்ளி வளாகத்தில் தேங்கி உள்ள மழைநீரை உடனடியாக அகற்ற மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள மின்மோட்டாரை 24 மணி நேரமும் தொடர்ந்து இயக்க வேண்டும். சில மணி நேரங்களுக்குள் மழைநீர் முழுவதும் அப்புறப்படுத்தப்படும்,” என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் உள்ள பகுதிகளை முழுமையாக பார்வையிட்ட மேயர், அங்கு 1960ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட “சி.வ. நகராட்சி பள்ளி” கல்வெட்டையும் கவனித்தார். இதையடுத்து, பள்ளியின் ஆவணங்கள் மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட பின், அந்த பள்ளியை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்.

மேலும் மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி நகரில் உள்ள கல்வி நிறுவனங்கள், சாலைகள் மற்றும் பொது பயன்பாட்டு இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சி.வ. அரசு மேல்நிலைப் பள்ளி நகரின் மையப்பகுதியில் அமைந்த முக்கிய கல்வி நிலையம். இதன் பராமரிப்பு பணிகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. மழைநீர் அகற்றப்பட்ட பிறகு, ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு தேவையான மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஏற்கனவே மாநகராட்சிக்குள் 21 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. சி.வந்தா குளம் பகுதியில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர்,” என தெரிவித்தார்.

ஆய்வின்போது மாநகராட்சி பொறியாளர் தமிழ்ச்செல்வன், இளநிலை பொறியாளர் லெனின், பள்ளி தலைமையாசிரியர் பேரியல் ஞானமணி, கல்வி அதிகாரி கண்ணன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், வட்டச் செயலாளர் ரவீந்திரன், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.