தூத்துக்குடி மாநகராட்சி 39வது வார்டில் “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கிய அரசியல் வழிகாட்டுதலின்படி இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் கலந்துகொண்டு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

முன்னதாக, தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு, கழக செயல்வீரர்களுக்கு “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” திட்டம் தொடர்பாக விரிவான ஆலோசனைகள் மற்றும் பொறுப்புகளை வழங்கினார்.

பின்னர், சிவன் கோவில் பின்புறம் பத்திரகாளி அம்மன் கோயில் தெருவில் வீடுதோறும் சென்று மக்களை நேரடியாக சந்தித்த அமைச்சர் கீதா ஜீவன், தமிழக அரசின் சாதனைகள் குறித்து விளக்கி, மக்கள் நல்வாழ்வுக்காக மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை பகிர்ந்து கொண்டார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் கரத்தை வலுப்படுத்தும் நோக்கில், மக்களிடையே ஆதரவை கோரி, தொடர்ச்சியான வளர்ச்சி பணிகளை முன்னெடுக்க திமுகவுக்கு ஆதரவு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், செயல்வீரர்கள் மற்றும் பலர் உற்சாகமாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.