தூத்துக்குடி மாநகராட்சியில் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளதாக மக்களிடமிருந்து புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, கொசுக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பேசுகையில் மேயர் ஜெகன் பெரியசாமி கூறியதாவது:
“தூத்துக்குடியில் தீபாவளி மழையால் பெரிய சேதம் ஏதும் ஏற்படவில்லை. முக்கிய சாலைகளில் தேங்கிய மழைநீர் 1 முதல் 2 மணி நேரத்திற்குள் அகற்றப்பட்டது. ஆனால் 2, 16, 17 ஆகிய வார்டுகளில் சில தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியிருந்தது. அந்த பகுதிகளில் கொசு உற்பத்தியை தடுக்க எண்ணெய் பந்துகள் மற்றும் மருந்து தெளிக்கப்பட்டது.

மாநகரில் கொசுத் தொல்லை 50 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதிகளில் முழுமையாக ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக நான்கு மண்டலங்களிலும் 4 சரக்கு ஆட்டோக்கள் மூலம் ஓடைகளில் மருந்து தெளிக்கும் பணி நடைபெறுகிறது. மேலும் 74 கை இயந்திரங்கள் மூலம் கொசு புகை அடிக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

மொத்தம் 250 டெங்கு தடுப்பு களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று கொசு புழு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இரும்பு கடைகளில் தேங்கியிருக்கும் நீர் மற்றும் கழிவுகளை உடனுக்குடன் அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருமண மண்டபங்களில் குப்பைகள், பிளாஸ்டிக் கப்புகள், பாட்டில்கள் போன்றவற்றையும் கண்காணித்து அகற்றப்படுகிறது.

மாநகரில் மொத்தம் 300 கிலோமீட்டர் நீளமான கால்வாய்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. அதில் 100 டன் அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இத்தகைய பிளாஸ்டிக் கழிவுகளை எதிர்காலத்திலும் தடுக்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

மழை ஓய்ந்துள்ள இந்த 15 நாட்களில் தேவையான பணிகளை முடித்து, வரவிருக்கும் மழையின்போது மக்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாத வகையில் தயாராக உள்ளோம். மாநகரப் பகுதியில் டெங்கு பரவல் எங்கும் இல்லை. வழக்கமான காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் வழியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவ முகாம்களும் நடைபெற்று வருகின்றன.

மருந்து ஊற்றும் பணிகளில் 214 பெண்களும், 30 ஆண்களும் களத்தில் ஈடுபட்டுள்ளனர். மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை தெருக்களில் கொசு மருந்து தெளிக்கும் பணிகள் நடைபெறும்,” என்றார் மேயர் ஜெகன் பெரியசாமி.

பின்னர், மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார பணிகள், கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களிடம் மேயரும் ஆணையரும் நேரடியாக கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்கினர்.

கூட்டத்தில் மாநகர நல அலுவலர் சரோஜா, சுகாதார அலுவலர்கள் ராஜபாண்டி, ராஜசேகர், கண்ணன், ஸ்டாலின், பாக்கியநாதன் உள்ளிட்டோர், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.