விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அவர்கள் மக்கள் தளபதி விஜய் அவர்களைப் பற்றி தரக்குறைவான முறையில் பேசியது கடுமையாக கண்டிக்கத்தக்கது என தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் திரு எபனேசர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் விளாத்திகுளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுகவின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ள மார்க்கண்டேயன் அவர்கள், தளபதி விஜய் குறித்து ஆபாசமான மற்றும் மரியாதையற்ற வகையில் பேசியது மக்கள் மனதை புண்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.

மேலும், “மார்க்கண்டேயன் அவர்கள் கடந்த காலத்தில் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, அரசின் சொந்த குளங்களை தனது ஆதரவாளர்களின் பெயரில் பட்டா பெற உதவி செய்ததும், அரசு செலவில் தனது குடியிருப்புப் பகுதியில் பூங்கா அமைத்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதும், விளாத்திகுளம் மக்களுக்குத் தெரிந்த உண்மைகள். இவ்வாறான பின்னணி கொண்டவர் தளபதி விஜய்யை விமர்சிப்பது மிகப் பெரிய செயலாகும்” எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

அவர் மேலும் வலியுறுத்தியதாவது:
“வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் விளாத்திகுளம் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் வலுவான வேட்பாளரை நிறுத்தி மாபெரும் வெற்றி பெறும். மார்க்கண்டேயன் அவர்கள் படுதோல்வி அடைவது உறுதி. இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் புதிய ஆட்சியை தமிழக வெற்றி கழகத் தலைவர் தளபதி விஜய் அவர்கள் தலைமையில் அமைப்போம். அப்போது மார்க்கண்டேயன் அவர்கள் செய்த ஊழல்கள் ஒன்றன்பின் ஒன்று வெளிச்சம் காணும். தளபதி விஜய் அவர்களைப் பற்றி தவறாக பேசியதற்காக உடனடியாக அவர் மன்னிப்பு கோர வேண்டும்” என எபனேசர் அவர்கள் தெரிவித்துள்ளார்.