சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார், விசாரணை என்ற பெயரில் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய திருப்புவனம் குற்றப்பிரிவு போலீசார் பிரபு, ஆனந்தன், கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அஜித்குமாரின் மரணத்திற்கு நீதி கேட்டு, மக்கள் நல உரிமை அமைப்பாளர் வழக்கறிஞர் அருணாதேவி ரமேஷ்பாண்டியன் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “மடப்புரம் கோவில் காவலாளியான அஜித்குமாரை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று அடித்து சித்திரவதை செய்து கொலை செய்ததாகக் கூறப்படும் போலீஸாருக்குத் அதிகபட்சமாக  தண்டனை கிடைத்திட தமிழக அரசு ஆக்கப்பூர்வமான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் மதுரை கிளை உயர் நீதிமன்ற நீதி அரசர் எஸ்.எம். சுப்பிரமணியம் துரித மற்றும் சட்டப்படியான உத்தரவுகளால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் அருணாதேவி ரமேஷ்பாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.

நீதியரசர் சுப்பிரமணியத்தின் நடவடிக்கைகள் இந்த வழக்கில் நீதியை நிலைநாட்டும் என்ற நம்பிக்கையை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.