தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டத்தில் உள்ள குளத்தூர் – வீரபாண்டியபுரம் சாலை, பாரத பிரதமர் கிராமப்புற சாலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சில மாதங்களுக்கு முன்பு புதிதாக அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்தச் சாலை முழுமையாக சேதமடைந்துள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தைப் பற்றி தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் எபனேசர் இன்று (அக்.29) வெளியிட்டுள்ள அறிக்கையில், “குளத்தூர் வழியாக வீரபாண்டியபுரம் செல்லும் இந்தச் சாலையில் 10 டன் வரையிலான வாகனங்கள் மட்டும் பயணிக்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், ஓட்டப்பிடாரம் ஒன்றியம் கொல்லம்பரம்பு சந்திரகிரி பகுதியில் உள்ள KKM கல் குவாரிக்கு சொந்தமான 40 டன், 50 டன் கனரக வாகனங்கள் தினந்தோறும் இந்தச் சாலையில் பாய்ந்து செல்கின்றன. இதனால் சாலை முற்றிலும் உடைந்து டேமேஜ் ஆகிவிட்டது,” எனக் கூறியுள்ளார்.

அவர் மேலும், “சாலை தற்போது பயணிக்க முடியாத அளவிற்கு மோசமாகி விட்டது. விவசாயிகள் தங்களுடைய விவசாய உற்பத்திகளை ஏற்றிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் கூட தினந்தோறும் பள்ளிக்குச் செல்ல அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உடனடியாக நேரில் ஆய்வு செய்து, சாலை சேதத்திற்கு காரணமான KKM கல் குவாரி நிர்வாகத்திடம் சாலை பழுது சரிசெய்வதற்கான முழு செலவையும் வசூல் செய்ய வேண்டும். மேலும், சட்டப்படி அந்த குவாரி நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்,” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோல், “குளத்தூர் பச்சையாபுரம் ஊரணி வழியாக செல்லும் இந்தச் சாலை, விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்துடன் நேரடியாக தொடர்புடையது. அரசு இதை அலட்சியம் செய்யாமல் உடனடியாக புதியதாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், தமிழக வெற்றிக் கழகம் மாவட்ட அளவில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தும்,” என எபனேசர் எச்சரித்துள்ளார்.

இந்த கோரிக்கைக்கு அரசு உடனடியாக பதில் அளிக்குமா என்பதை மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.