தூத்துக்குடி மாவட்டம் மருதூர் அணைக்கட்டில் நீர்வரத்து வேகமாக அதிகரித்து வருவதையடுத்து பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் திரு. க. இளம்பகவத், இ.ஆ.ப., அவசர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.

தற்போதைய நிலவரப்படி தாமிரபரணி ஆற்றில் இருந்து மருதூர் அணைக்கட்டிற்கு விநாடிக்கு 20,000 கனஅடி அளவிற்கு வெள்ள உபரி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனுடன் கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்டுள்ள கனமழையைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முக்கிய அணைகளில் இருந்து கூடுதல் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் வரத்து மேலும் அதிகரிக்கும் நிலையில் உள்ளது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் தகவலின்படி—

காரையார் மற்றும் சேர்வலாறு அணைகளில் இருந்து: விநாடிக்கு 12,000 கனஅடி

மணிமுத்தாறு அணையில் இருந்து: விநாடிக்கு 4,000 கனஅடி

மொத்தம் 16,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நீரோட்டம் 25.11.2025 காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை மருதூர் அணைக்கட்டிற்கு வந்து சேரும் எனவும், மொத்த நீர்வரத்து 33,000 முதல் 35,000 கனஅடி வரை உயரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு, மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்கள், கோரம்பள்ளம் பகுதி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், ஆற்றங்கரைக்கு செல்லாமல் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

மேலும், மருதூர், திருவைகுண்டம், கோரம்பள்ளம் அணைக்கட்டுகள், உப்பாறு – உப்பாத்து ஓடைகள் மற்றும் மாவட்டத்தின் அனைத்து நீர்நிலைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் எனவும், உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கும் ஆட்சியர் திரு. க. இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார்.

வெள்ளப் பெருக்கு அதிகரிக்கும் சூழ்நிலை காணப்படுவதால், பொதுமக்கள் அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்றுமாறு மாவட்ட நிர்வாகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.